சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் விக்னேஷிடம் மதுபான விலையை உயர்த்தி அரசின் வருவாயைப் பெருக்குவதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அரசின் நோக்கம் மதுபான விலையை உயர்த்தி வருவாயைப் பெருக்குவது அல்ல. இந்தத் துறையில் உள்ள நடைமுறைகளைச் சீரமைப்பதே நோக்கம். ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் மதுபான விலையும் உயரும் என்ற கருத்து சரியல்ல என்றார்.
இதுவரை எத்தனை பேரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளீர்கள்? என்ற கேள்விக்கு, இதுவரை குறைந்தபட்சம் 30 முதல் 40-க்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கூடுதல் தொகை வசூலிக்கும் பிரச்சினை இன்னும் தொடர்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பே இதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் இன்னும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தப் பிரச்சினை தொடர்ந்து இருப்பது உண்மை. அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தரப்பிலிருந்தும் கேட்டறிந்தோம். அவர்களது தரப்பிலும் சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர். அந்தப் பிரச்சினைகளையும் சரிசெய்துள்ளோம். இனி இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகள்தான் எடுக்கப்பட்டு வருகின்றன எனக்கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹3 கோடி! செட்டிநாடு குழும தலைவர் முத்தையா நன்கொடை!
மேலும், இது கடை விற்பனையாளர்கள் மற்றும் கடை கண்காணிப்பாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல. அந்த மாவட்டத்தின் கண்காணிப்பாளர்கள் மற்றும் மேலாளர் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது. அனைவரும் இணைந்து இந்த முறைகேட்டைத் தடுக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதுமானதாக உள்ளதா என்று கேட்டீர்களா? ஊதியம் குறைவாக இருப்பதால்தான் கூடுதல் தொகை வசூலிக்கிறார்கள் என்று கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, அவர்கள் கூடுதல் தொகை வசூலிக்கிறார்கள் என்பதற்காக, அதனை அரசே அங்கீகரிக்க முடியாது. அரசுக்கு ஊதியம் வழங்குவதற்கென தனித்த விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய முறையின்படியே அரசு முடிவு எடுக்கும் என்றார்.
டாஸ்மாக் பார் ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது? புதிய அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்பது குறித்த கேள்விக்கு, டாஸ்மாக் பார் ஒப்பந்தங்கள் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. புதிய டெண்டர் அறிவிக்கப்பட வேண்டும். டெண்டர் அறிவிப்பு, விண்ணப்பங்கள், ஆய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளுக்கும் சுமார் நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால்தான் இரண்டு மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கேள்வி: தற்போதைய அரசு டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. மதுப் பழக்கத்திலிருந்து மக்களை மீட்பதற்காக மறுவாழ்வு மையங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்ற கேள்விக்கு, சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள மறுவாழ்வு மையத்துக்குச் சென்று அதன் கட்டமைப்புகளை ஆய்வு செய்தேன். முந்தைய காலங்களில் பள்ளி மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவற்றால் எந்த அளவுக்கு பயன் கிடைத்தது என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம்.
எத்தனை பேர் உண்மையில் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்பதையும் கண்காணித்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல், இதைத் தாண்டி மேலும் பயனுள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் பல்வேறு பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுபானம் வாங்கவோ அல்லது பப் போன்ற இடங்களுக்கு வரவோ அனுமதிக்கப்படுகிறார்களா? எனக்கேட்டதற்கு, இது மிகவும் முக்கியமான விஷயம். எல்-3 பார், பப் உள்ளிட்ட இடங்களில் 21 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதித்தால், அந்த நிறுவனத்தின் உரிமம் (லைசன்ஸ்) ரத்து செய்யப்படும். இதுகுறித்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு உட்பட்டவர்கள் இத்தகைய இடங்களில் அனுமதிக்கப்படக் கூடாது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாகக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாட்சிகளை அச்சுறுத்துகிறார் அமைச்சர்! ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சிபிஐ இயக்குநரிடம் திமுக மணு!