தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த தனித்துவமான படைப்பாளராகவும், கரிசல் மண்ணின் வாழ்வியலைத் தனது எழுத்துக்களால் உலகிற்கு உரக்கச் சொன்னவருமான சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி தமிழ் நெஞ்சங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பூமணி அவர்களின் மறைவு குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கரிசல் மண்ணின் குரலாகவும், தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளராகவும் விளங்கிய சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமது எழுத்தின் வழியாக மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அழுத்தமாகப் பதிவு செய்த அவரது இலக்கியப் பணி தமிழ் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!
எழுத்தாளர் பூமணி அவர்களின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும் வேளையில், அன்னாரின் புகழுக்குத் தனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவதாக இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்த் திரையுலகிலும் தடம் பதித்த (கருவேலம் பூக்கள் திரைப்படம்) இந்த ஆளுமையின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வாசகப் பெருமக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தனது செய்தியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநில உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுக்காது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!