அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் முன்ஒப்புதல் இல்லாமல் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதோ அல்லது கட்சியின் பெயரில் நிகழ்ச்சிகளை நடத்துவதோ கூடாது என்று அ.தி.மு.க. தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அமைப்பினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று ஏராளமான இளைஞர்கள் கட்சியில் இணைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வமாக இளைஞர்களை ஒருங்கிணைத்து சிலர் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கீகாரம் பெறாத அறிவிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியாவதால் குழப்பம் ஏற்படுவதற்கும், தவறான தகவல்கள் பரவுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!
இதனைத் தவிர்க்கும் வகையில், அ.தி.மு.க. பெயரில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மூலம் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல் சில இடங்களில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய கட்டுப்பாடுகளை கட்சி தலைமை அமல்படுத்தியுள்ளது.
மேலும், இளைஞர்களை இணைய வழியாக அதிகாரப்பூர்வமாக இணைக்கும் வகையில் விரைவில் சிறப்பு ஆன்லைன் பதிவு படிவம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்மூலம் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிகழ்ச்சிகள் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் வாயிலாக ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல் யாரையும் கட்சியில் உறுப்பினராக சேர்ப்பதோ, அ.தி.மு.க. பெயரில் கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளை நடத்துவதோ கூடாது என்று கட்சி தலைமை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு அ.தி.மு.க.வில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உழைச்சவங்கள உதாசீனப்படுத்துறீங்க! ஓடுறவங்கள கொண்டாடுறீங்க! அதிமுகவில் மீண்டும் கலகக்குரல்! எடப்பாடிக்கு சிக்கல்!