தர்மபுரி: அ.தி.மு.க.வில் தொடரும் உட்கட்சி பிளவு சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ. ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க வேலுமணி அணியினர் 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக அ.தி.மு.க. அமைப்பு செயலர் சிங்காரம் கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி மரகதம், அரூர் சம்பத்குமார் ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றனர். பிளவு ஏற்பட்ட பிறகு அன்பழகன் மற்றும் மரகதம் வேலுமணி அணியில் இணைந்தனர். அரூர் எம்.எல்.ஏ. சம்பத்குமார் மட்டும் பழனிசாமி அணியுடன் உறுதியாக நிற்கிறார்.
இது குறித்து தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்காரம், “பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ. சம்பத்குமாரை தங்கள் பக்கம் இழுக்க வேலுமணி அணியினர் 10 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர். முதல் தவணையாக 5 கோடியும், இரண்டாவது தவணையாக 5 கோடியும் தருவதாக கூறினர். ஆனால் சம்பத்குமார் கட்சியின் மீதுள்ள பற்றுக்காக பணத்துக்கு மயங்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: அதிமுகவில் உட்கட்சி பிளவு உச்சம்! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! செங்கோட்டையன் அசைன்மென்ட் சக்சஸ்!

இதனிடையே, திருநெல்வேலி காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்று பழனிசாமி ஆதரவாளர்கள் திரண்டு, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் படங்களை அவமதித்து எதிர்ப்பு தெரிவித்தனர். “திருநெல்வேலிக்குள் வேலுமணி-சண்முகம் அணியினர் யாரும் வர முடியாது” என எச்சரிக்கையும் விடுத்தனர்.
பிளவுக்கு காரணம் குறித்து மேட்டூர் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம் கூறுகையில், “வேலுமணிக்கு 21 தொகுதிகளும், சண்முகத்துக்கு 21 தொகுதிகளும் பொறுப்பு கொடுக்கப்பட்டன. அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் தோல்வி ஏற்பட்டது. இதை பழனிசாமி கேட்டதால் கோபமடைந்து அவர்கள் பிரிந்து சென்றனர். குட்டையில் தண்ணீர் இருக்கும் வரை மீன்கள் இருக்கும். தண்ணீர் வற்றியதும் மீன்கள் வேறு இடம் தேடிச் செல்லும்” என விளக்கமளித்தார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: உங்க மொத்த கடனையும் அடைச்சிருறேன்! இந்த பக்கம் வந்திருங்க! பலத்தை கூட்ட பேரத்தை ஆரம்பித்த எடப்பாடி!