தமிழக சட்டசபை தேர்தல் 2026க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாணியை பின்பற்றி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார். இது ஜெயலலிதாவின் பிறந்தநாள் மட்டுமல்ல, வளர்பிறை அஷ்டமி திதி நாளாகவும் இருப்பதால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா காலத்தில் வழக்கமாக வளர்பிறை அஷ்டமி, பஞ்சமி போன்ற திதி நாட்களில் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட்டு வெற்றி பெற்று வந்தார். அந்த நம்பிக்கையை தொடர்ந்து, பழனிசாமியும் அதே பாணியை கையாள்கிறார்.
இதையும் படிங்க: எடப்பாடிபழனிசாமி மகன், மச்சான் கையில் உச்ச அதிகாரம்!! சீட்டுக்காக சுற்றி சுற்றி வரும் அதிமுகவினர்!!

மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பே பட்டியலை தயார் செய்து வைத்துள்ளார் பழனிசாமி. திருப்பதி சென்று பெருமாள் தரிசனம் செய்து, பெருமாள் திருவடியில் வைத்து தரச் சொல்லி பெற்று வந்துள்ளார். இந்த நாளில் 15 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்களை அறிவிப்பார்” என்றார்.
இந்த பட்டியலில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் இடம்பெற உள்ளனர். ஒரு பெண் வேட்பாளருக்கும் இடம் ஒதுக்கப்படும். கோங்கு மண்டலம், தென் மாவட்டங்கள், டெல்டா, வட மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மூத்த தலைவர்களை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. மேலும், தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் அன்றைய தினம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில், அதிமுக இந்த அதிரடி நகர்வால் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை பெறவும் முயல்கிறது.
ஜெயலலிதா ஸ்டைலில் தொடங்கிய இந்த அணுகுமுறை தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்குகின்றன. பிப்ரவரி 24 அன்று என்னென்ன பெயர்கள் இடம்பெறும் என்பது இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு?!! சாத்தியமா? வேணாமா? எடப்பாடி தீவிர டிஸ்கஷன்!