ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான ஏடிஎஃப் அடிப்படை விலை முறையே 25 சதவீதம் மற்றும் 100 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட முக்கிய உள்நாட்டு விமான நிறுவனங்கள் கடும் நிதி அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன.
பாகிஸ்தான் வான்வெளி தடை காரணமாக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நீண்ட தூர வழித்தடங்களில் விமானங்கள் நீண்ட சுற்று வழியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காசிய பகுதியில் வான்வெளி கட்டுப்பாடுகளும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் இணைந்து விமான நிறுவனங்களின் இயக்கச் செலவை மேலும் அதிகரித்துள்ளன.

இந்தச் சூழலில் பல நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (ஃப்யூல் சர்சார்ஜ்) உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் விமான டிக்கெட் கட்டண உயர்வால் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நெருக்கடியை தணிக்கும் வகையில் மத்திய அரசு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு முக்கிய சலுகையை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேற்காசிய போரால் முடங்கிய தொழில்கள்..!! ரூ.2.50 லட்சம் கோடி கடன்..!! மத்திய அரசு முடிவால் நிம்மதி..??
இந்திய விமான நிலையங்களின் பொருளாதார ஒழுங்காற்று ஆணையம் (ஏரா - AERA) மூலம், நாட்டின் 34 முக்கிய விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களுக்கான லேண்டிங் (தரையிறங்கும்) மற்றும் பார்க்கிங் (நிறுத்துமிட) கட்டணங்களை 25 சதவீதம் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை முதல் கட்டமாக மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். அதன் பின்னர் சூழலைப் பொறுத்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மட்டுமே பொருந்தும். முக்கிய விமான நிலையங்களைத் தவிர, ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) நிர்வகிக்கும் பிற விமான நிலையங்களிலும் இதே அளவு குறைப்பு அமல்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கையால் விமான நிறுவனங்களுக்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை செலவு மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செயல்பாட்டுச் செலவு குறையும் என்பதால், நிறுவனங்கள் மேலும் டிக்கெட் விலையை உயர்த்தாமல் தடுக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக டிக்கெட் கட்டணங்கள் குறைய வாய்ப்பில்லை என்றாலும், போர் நெருக்கடி காரணமாக மேலும் விலை உயர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள இந்த சலுகை மறைமுகமாக பயனளிக்கும்.
விமான நிறுவனங்கள் தொடர்ந்து அரசிடம் நிதி நிவாரணம் கோரி வந்த நிலையில், இந்த உடனடி நடவடிக்கை துறையின் மீட்சிக்கு உதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பயணிகளும் இந்தச் சூழலில் சற்று நிம்மதி அடையலாம் என்றாலும், சர்வதேச எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்தே நீண்டகால தீர்வு அமையும்.
இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!