பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் நடைபெறலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் தேசிய அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து மத்திய அரசு அல்லது பாஜக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருந்தார். இதையடுத்து, அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் டெல்லி அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றன. வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிரதமரின் முதன்மை செயலாளருமான சக்திகாந்த தாஸ் நிதி அமைச்சராக பொறுப்பேற்கலாம் என்ற தகவலும் பேசப்படுகிறது. அதேபோல், தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே துறைகளை கவனித்து வரும் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்து ரயில்வே துறை பிரிக்கப்பட்டு வேறு அமைச்சருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கொம்பு சீவி விட்டு அன்புமணியை பாராட்டிய அமித் ஷா!! ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாமக!! திரைமறைவு ஆட்டம்?

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கூடுதல் அமைச்சகப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மகாராஷ்டிராவில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் கல்யாண் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ஸ்ரீநாத் ஷிண்டேவுக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்த மாற்றங்களில் அதிக கவனம் பெறுவது அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்தான். தற்போது மத்திய அமைச்சரவையில் துணைப் பிரதமர் பதவி இல்லாத நிலையில், அந்த பதவி மீண்டும் உருவாக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாஜக தலைமை மட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத அரசியல் யூகங்களாகவே உள்ளன. அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் அல்லது மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட பிறகே இறுதி நிலை தெளிவாகும்.
இதையும் படிங்க: அமித் ஷா - யோகி ஆதித்யநாத் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி! மோதலை முடித்து வைத்தது பாஜக!