சென்னை: பா.ஜ.,வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையை மையமாகக் கொண்டு புதிய கட்சி தொடங்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அ.தி.மு.க., உடனான கூட்டணிக்காக பா.ஜ., தேசிய தலைமை அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தவிர பிற முக்கிய தலைவர்கள் வருகை தரும் நிகழ்ச்சிகளை பல சமயங்களில் புறக்கணித்தார். சட்டசபைத் தேர்தலில் சில தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டும் அதை ஏற்க மறுத்த அண்ணாமலை, 95 தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார்.
ஆனாலும், சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில், அண்ணாமலைக்குப் பின்னால் பெரும் இளைஞர் பலம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பா.ஜ., மாநில தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் விஷ்ணு பிரசாத், “அண்ணாமலை மீது இளைஞர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது தலைமையில் எது நடந்தாலும் அது எழுச்சியாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

இந்நிலையில், மே 26 முதல் 29 வரை பா.ஜ., தேர்தல் தோல்வி ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அண்ணாமலை இந்தக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும், அந்த நாட்களில் தென்கொரியா செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அண்ணாமலை ஆதரவாளர்கள் ‘புதிய தமிழகம் ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களில் அண்ணாமலை உருவத்துடன் கூடிய கொடியை வடிவமைத்து சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஊழலற்ற நிர்வாகம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு நேரடி உதவி, அரசு பள்ளி-மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
‘அகில இந்திய அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரிலும் பதிவுகள் வெளியாகி வருகின்றன. அண்ணாமலை இதுவரை இந்த முயற்சிகளுக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இதனால் அவர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!