ரியாத்: ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் பதற்றத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதை முடங்கியுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை துவக்க முடிவு செய்துள்ளது. இது உலக எண்ணெய் சந்தையில் பெரும் நிவாரணமாக இருக்கும் என்றாலும், செங்கடலும் பாதுகாப்பானது அல்ல என்பது கவலை அளிக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் வளைகுடா கடலில் நூற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளன. தினசரி 2 கோடி பேரல் எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அராம்கோ தனது கிழக்கு பகுதி எண்ணெய் வயல்களிலிருந்து மேற்கு பகுதியில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டு செல்லும் East-West Pipeline-ஐ (கிழக்கு-மேற்கு குழாய்) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த குழாய் தினசரி 5 மில்லியன் பேரல் (சில சமயம் 7 மில்லியன் வரை) கொள்ளளவு கொண்டது.
இதையும் படிங்க: உச்சம் தொடும் கச்சா எண்ணெய் விலை?!! $100 டாலரை தாண்டலாம் எனவும் கணிப்பு!!

அராம்கோ ஆசிய வாடிக்கையாளர்களிடம் (குறிப்பாக சீனா, இந்தியா) யான்பு துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொள்ள முடியுமா என கருத்து கேட்டுள்ளது. சில ஆசிய சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளன. Arab Light போன்ற கிரேடு எண்ணெய் யான்பு வழியாக ஏற்றுமதி செய்யப்படும். இது உற்பத்தி குறைப்பை தவிர்க்க உதவும் என்று நம்பப்படுகிறது.
ஆனால் செங்கடல் வழியும் ஆபத்தானது. ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி பயங்கரவாதிகள் செங்கடல் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர். பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பெரிய கப்பல் நிறுவனங்கள் இந்த வழியை தவிர்க்கின்றன. அராம்கோவின் ராஸ் தனூரா சுத்திகரிப்பு நிலையம் ஈரான் ட்ரோன் தாக்குதலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்று வழி தற்காலிக தீர்வாக இருந்தாலும், ஹவுதி அச்சுறுத்தல் காரணமாக முழு ஏற்றுமதி சாத்தியமாகாது. உலக எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்து வருகிறது. போர் நீடித்தால் உற்பத்தி குறைப்பு, பொருளாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சவுதி அரேபியா, எகிப்து போன்ற நாடுகள் Sumed போன்ற மாற்று குழாய்களை பயன்படுத்தி உதவ முன்வந்துள்ளன.
இதையும் படிங்க: உச்சம் தொடும் கச்சா எண்ணெய் விலை?!! $100 டாலரை தாண்டலாம் எனவும் கணிப்பு!!