தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை பொழிவு கணிசமாகக் குறைந்துள்ள சூழலில், பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் அத்தியாவசியப் பணிகளைத் துரிதப்படுத்தவும் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு, வறட்சி நிலவரம், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் குடிநீர் விநியோகம், குறுவை சாகுபடித் தொகுப்பு விநியோகம் மற்றும் கால்நடைத் தீவனக் கையிருப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் மாதம் முதல் இன்று வரை மாநிலத்தில் மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாகவே பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கடலூர், மதுரை, சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 19 முதல் 59 சதவீதம் வரையிலும், செங்கல்பட்டு மற்றும் இராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவும் மழை பொழிந்துள்ளது. இத்தகைய சூழலில் குடிநீர் ஆதாரங்களைப் பலப்படுத்துவது இன்றியமையாதது என்பதால், ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய கிணறுகள் அமைத்தல், பழுதடைந்த மின்வடங்கள் மற்றும் குழாய்களை மாற்றுதல், அத்தியாவசிய இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!
மேலும், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் லாரி குடிநீர் விநியோகத்திற்காக 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தீவனச் சேமிப்பிற்காக 10 கோடி ரூபாயும் என மொத்தம் 340 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அத்துடன், குறுவை தொகுப்புத் திட்டத்தினை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கி முடிக்க வேளாண்மைத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று பணிகளைக் கண்காணிக்கவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர். வினோத், நெ. மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தவெக-வில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி! முதல்வர் வருகைக்காக கரூரில் மெகா ஆய்வு!