குவஹாத்தி: அசாம் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் சட்டசபையின் 126 தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 31,490 வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட உள்ளனர். இந்நிலையில், உடல்குரி (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுரேன் தைமரி நேற்று மாலை திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சுரேன் தைமரி கூறுகையில், “காங்கிரஸ் தலைமை என்னை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் பிரசாரம் முழுவதும் கட்சித் தலைமை என்னுடன் அடிப்படைத் தொடர்பு கூட வைக்கவில்லை. மூத்த தலைவர்களை தொடர்பு கொள்ள முயன்றேன். எந்தப் பதிலும் வரவில்லை. ஒருங்கிணைப்போ, ஆதரவோ, வழிகாட்டுதலோ எதுவும் இல்லை. எனவே போட்டியில் இருந்து விலகுகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: கம்பி நீட்டிய காங்., எம்பி! கட்சி மாறவும் திட்டம்! அடுத்தடுத்த திருப்பத்தில் அசாம் தேர்தல்!

இந்த முடிவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார். ஆனால் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு மார்ச் 26ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதால், இப்போது அவரது விலகல் மிகவும் தாமதமானது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவரது பெயர் வாக்குப் பட்டியலில் தொடர்ந்து இருக்கும்.
அசாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பெதப்ரதா போரா இது குறித்து, “சுரேன் தைமரி இதுவரை முறைப்படி ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கவில்லை. எங்களுக்கு இது குறித்து தெரியாது. அவரை தொடர்பு கொண்டு பேசுவோம்” என்றார்.
இந்தத் திடீர் அறிவிப்பு அசாம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள உள் மோதல் அல்லது அதிருப்தி வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு வேட்பாளரின் விலகல் அறிவிப்பு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தயாரிப்பில் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!