தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சர்வதேச அரங்கில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்று டெல்லியில் நடைபெற்றது. ஆஸ்திரியா பெடரல் சான்சலர் (அதிபர்) டாக்டர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராணுவ மோதலால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் பகுதிகளில் நிலவும் மோதல்களுக்கு அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “இன்று ஒட்டுமொத்த உலகமும் மிகவும் கடுமையான மற்றும் பதட்டமான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது. உலகில் நிலவும் இந்தப் பதட்டமான சூழ்நிலையின் தாக்கத்தை நாம் அனைவரும் உணர்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

ஆஸ்திரிய சான்சலர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் இது. அவருடன் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு உடன் வந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரியா இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அரங்கில் தற்போது நிலவும் பதற்றமான சூழல் குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாகப் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் மோதல்கள் உலகப் பொருளாதாரத்தையும் அமைதியையும் பாதித்து வரும் நிலையில், அமைதியான தீர்வுக்கு இரு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பு இந்தியா - ஆஸ்திரியா இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரிய சான்சலர் ஸ்டாக்கரின் இந்தியப் பயணம் ஏப்ரல் 17 வரை நீடிக்கும்.
இதையும் படிங்க: பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா!! தாமதம் துரதிர்ஷ்டவசமானது!! மோடி உருக்கம்!