சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் செய்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக பெருமை பேசும் தமிழக வெற்றிக் கழக அரசு, எத்தனை கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடையின் பார் உரிமையாளர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த சலுகை கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “இவர்களே பாம் வைப்பாங்களாம், இவர்களே எடுப்பாங்களாம் என்பது போல இந்த தில்லுமுல்லு நடக்கிறது. முதல்வர் ஜோசப் விஜய்க்கு இது தெரியாமல் நடக்குமா? த.வெ.க. நிர்வாகிகளுக்கு கொலை, பாலியல் குற்றங்கள், மிரட்டி மாமூல் வாங்குதல், சட்டவிரோத டாஸ்மாக் நடத்துதல் உள்ளிட்டவற்றுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதுதான் அனைவருக்குமான ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கூடுதலாக ரூ.10 வசூலிப்பு!! கண்காணிக்கும் உளவுத்துறை போலீசார்! சைலண்டாக பறந்த உத்தரவு!

மேலும், “முந்தைய அரசைப் போலவே வெற்று விளம்பரங்களில் ஆட்சி நடத்துவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே டாஸ்மாக் கடைகள் மூடல், மீண்டும் திறப்பு உள்ளிட்ட சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. மதுபானக் கடைகளை ஒழுங்குபடுத்துவதாக கூறிய அரசு, நடைமுறையில் உண்மையான சீர்திருத்தத்தை செய்யத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடல் தொடர்பான தெளிவான புள்ளிவிவரங்கள் மற்றும் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. மக்கள் நலன் கருதி அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் போட்ட போடு... தனியார் பார்களில் இனி இது நடக்கவே கூடாது... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!