அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் கண்டுகளிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கேரோலின் லெவிட், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த மெகா இறுதிப் போட்டிக்கு அதிபர் டிரம்ப் நேரில் வருகை தந்து, போட்டியை ரசிப்பதுடன் வெற்றி பெறும் அணிக்கு உலகக் கோப்பையையும் நேரில் வழங்க உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நியூயார்க் நியூஜெர்சியில் உள்ள புகழ்பெற்ற மெட்லைஃப் ஸ்டேடியத்தில் (MetLife Stadium) இந்த இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான நடப்பு உலக சாம்பியன் அர்ஜென்டினா அணியும், ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியும் மகுடத்திற்காக நேருக்கு நேர் மோதவுள்ளன.
இதையும் படிங்க: வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!
இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரில் (Trump Tower) ஃபிஃபா அமைப்பு வழங்கும் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியிலும் அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார். கடந்த மாதம் இது குறித்துப் பேசியிருந்த ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து உலகக் கோப்பை வரலாற்றில் புதிய நடைமுறையாக வெற்றியாளருக்குக் கோப்பையைத் தாம் பகிர்ந்து வழங்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க வரலாற்றிலேயே மிக வெற்றிகரமாகவும், அதிகப் பார்வையாளர்களாலும் பார்க்கப்பட்ட இந்த உலகக் கோப்பை தொடரின் நிறைவு விழா மற்றும் இறுதிப் போட்டிக்கு நாட்டின் அதிபரே நேரில் வருவது விளையாட்டு உலகிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. இந்திய நேரப்படி வரும் ஜூலை 20 (திங்கட்கிழமை) அதிகாலை 00:30 மணிக்கு இந்த மாபெரும் இறுதிப் போட்டி தொடங்குகிறது.
இதையும் படிங்க: மீண்டும் வெடித்த மோதல்..!! ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் ரத்து.. அதிரடி காட்டும் அமெரிக்கா..!!