பிரிட்டனில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், ராயல் நேவி கடற்படையில் பணியாற்றி வந்த பெண் கமாண்டோ உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பிரிட்டனின் டெவான் பகுதியில் வழக்கமான ராணுவ பயிற்சி நடைபெற்று கொண்டிருந்த போது, மெர்லின் எம்கே4 வகை ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராயல் நேவி கடற்படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 31 வயதான லெப்டினன்ட் லில்லி மே பிஷர் முக்கியமாக கவனம் பெற்றுள்ளார். பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய ஒரே பெண் கமாண்டோவாக அவர் அறியப்பட்டார். ஹெலிகாப்டர் பைலட்டாக முழுமையான தகுதி பெறுவதற்கான இறுதி விமானப் பயிற்சி மதிப்பீட்டில் பங்கேற்றிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்! 6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

லில்லி மே பிஷர் இந்த மாத இறுதிக்குள் ஹெலிகாப்டர் பைலட் தகுதி பெறவிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது திடீர் மரணம் ராணுவ வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ சேவையுடன் சமூக வலைதளங்களிலும் லில்லி சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். குறிப்பாக, பெண்கள் ராணுவத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சமத்துவம் மற்றும் பெண்களின் பங்களிப்பு குறித்து தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வந்ததால், அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற இரு கடற்படை வீரர்களின் விவரங்களும் பின்னர் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து ராயல் நேவி மற்றும் பாதுகாப்புத் துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.
பயிற்சிப் பணியின் போது நிகழ்ந்த இந்த விபத்து பிரிட்டன் ராணுவ வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, லில்லி மே பிஷரின் சேவையையும் அர்ப்பணிப்பையும் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்த ஒரு முன்னுதாரண நபரை இழந்துள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!