சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு முக்கியமான பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தாக்கல் செய்த இந்த மனு, சாதி மற்றும் மத அடையாளங்களைத் துறக்க விரும்பும் தனிநபர்களுக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிதாக்கக் கோருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், நீதிபதி எம். தண்டபாணியின் உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ‘சாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழை பார்த்திபன் பெற்றார். பின்னர் அவர் நீதிபதி முன் ஆஜராகி அந்தச் சான்றிதழைக் காட்டியபோது, நீதிபதி ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். “நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது. இதேபோல் விண்ணப்பிக்கும் மற்றவர்களும் எளிதாகப் பயனடையும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
அதையடுத்து பார்த்திபன் பொதுநல வழக்கு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார்.அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தற்போது அவர் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சாதி, மதமற்றவர் என சான்று கோருபவர்களுக்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்கும் வகையில் சட்டம் இயற்றவோ அல்லது அரசாணை, சுற்றறிக்கை பிறப்பிக்கவோ அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அவரது முக்கியக் கோரிக்கை.
இதையும் படிங்க: தனுஷின் அரசியல் பயணம் குறித்து ஜோதிடர் கணிப்பு..!! திமுக, அதிமுகவுக்கு சவாலா?

மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2025 ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் அப்போதைய அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவில் சிக்கல்கள் இருந்ததால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அத்தகைய தடைகள் இல்லாத நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டம் இயற்றுவதால் ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் உள்துறை, வருவாய்த் துறை மற்றும் சட்டத்துறைச் செயலாளர்களுக்கு நான்கு வாரங்களுக்குள் மனுவுக்குப் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்தனர்.இந்த முயற்சி வெற்றி பெற்றால், சாதி-மத வேறுபாடுகளைத் துறந்து வாழ விரும்பும் பலருக்கு எளிதான வழி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!