டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, பண மூட்டை விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு டெல்லியில் அவரது அரசு பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் எரிந்த நிலையில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாகக் கிடந்ததை கண்டுபிடித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தனர். இதை ஏற்ற சபாநாயகர், விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மகளிருக்கு ரூ.3000..! மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை வாக்குறுதிகளை அறிவித்த அமித்ஷா..!!

இந்த விசாரணையை ரத்து செய்யக் கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட், பார்லிமென்ட் விசாரணைக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என அனுமதி அளித்தது.
இதையடுத்து பார்லிமென்ட் குழு விசாரணை நடத்தியது. தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள் விசாரணையை எதிர்கொண்டு வந்த யஷ்வந்த் வர்மா, பதவி நீக்க நடவடிக்கையும் எதிர்நோக்கியிருந்தார். இந்த சூழலில் இன்று அவர் தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பண மூட்டை சர்ச்சை நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. நீதிமன்றப் பதவியில் இருந்த ஒருவர் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தது, நீதித் துறையின் நம்பகத்தன்மையை பாதித்ததாக பலரும் விமர்சித்தனர்.
யஷ்வந்த் வர்மாவின் ராஜினாமா, நீண்டகாலமாக நீடித்து வந்த இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த விவகாரம் நாட்டின் நீதித் துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!