அஜித் குமார் என்ற இளைஞர் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் விசாரணையின்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 44 காயங்கள் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, இது காவல் நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகவும், சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிமன்றம் கூட இதனை உறுதி செய்தது. இந்த மரணம் திமுக ஆட்சியில் 25-வது காவல் நிலைய மரணம் எனவும், இது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். மேலும், 2021 முதல் தமிழகத்தில் 24 காவல் மரணங்கள் நடந்ததாகவும், இது காவல்துறையின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். அஜித்குமாரின் உடல் விரைவாக எரிக்கப்பட்டதாகவும், இது ஆதாரங்களை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையும் படிங்க: சென்னையிலும் கைவரிசை காட்டிய நிகிதா! அடுத்தடுத்த புகார்களால் மீண்டும் அப்ஸ்காண்ட்..!
தொடர்ந்து, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நீதிபதிகள் இது சாதாரண கொலை அல்ல அடித்தே கொலை செய்துள்ளார்கள்., கொடூர கொலை என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைவாக தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதன்பேரில், மடப்புரம் கோவில் அலுவலகம், அஜித்குமார் தாக்கப்பட்டபோது வீடியோ எடுக்கப்பட்ட இடம், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அஜித் குமார் மரண வழக்கில், மடப்புரம் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக் வேல், பிரவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் செக்யூரிட்டி வினோத்குமார் மற்றும் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமார் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து நேற்று கோவில் அதிகாரியின் டிரைவர் கார்த்திவேல், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், அஜித்குமாருடன் வேலை பார்த்து வந்த வினோத்குமார் மற்றும் பிரவீன் ஆகிய 5 பேரிடம் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த தினத்தில் நடந்தது என்ன, போலீசார் எவ்வாறு நடந்து கொண்டார்கள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மடப்புரம் கோவிலுக்கு விளக்கு விற்பனை செய்யும் அழகுப் பெண் என்பவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மதுரை- ராமேஸ்வரம் சாலையில் உள்ள தனியார் பேக்கரி கடையில் உள்ள சிசிடிவியை சிபிஐ ஆய்வு செய்ததோடு, அஜித்குமார் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு வேலை 80 கி.மீ தூரத்தில்.. எனக்கு இதில் திருப்தி இல்லை.. அஜித்குமார் சகோதரர் வேதனை..!