சென்னை: பிளஸ் டூ பொதுத் தேர்வு விடைத்தாள்களின் மறு மதிப்பீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப குளறுபடி விவகாரத்தில் சிபிஎஸ்இயிடம் இருந்து விரிவான அறிக்கையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் கோரியுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்களை மறு மதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்புக்காக முழுமையாக டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்தது. ஓ.எஸ்.எம் (On Screen Marking Evaluation) எனப்படும் கணினி திரைவழி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இந்த புதிய முறையில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்தனர். விடைத்தாள்கள் தெளிவாகத் தெரியவில்லை, சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை, மதிப்பெண்கள் தவறாக பதிவாகியுள்ளன என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க: திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!
இந்த புகார்களை சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டு, தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்தது. இந்நிலையில், மறு மதிப்பீட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்ட COEMPT நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட விதம் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இயிடம் விளக்கம் கேட்டுள்ளது.

ஒப்பந்தம் வழங்கும் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள், முடிவெடுத்த அதிகாரிகள், ஒப்பந்த செயல்முறையின் முழு விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தத்தில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது குறைபாடுகள் இருந்தால், பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கிய தேர்வு மதிப்பீட்டில் ஏற்பட்ட இந்த குளறுபடி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களில் மாற்றம் கோரி மனு அளித்த நிலையில், டிஜிட்டல் முறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை சிபிஎஸ்இயின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி விரைவில் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!