மத்திய அரசு, எல்.பி.ஜி. (LPG) சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை கையாளும் வகையில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், வளைகுடா பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டு, இந்தியாவிலும் எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு போன்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 3.1 முதல் 3.3 கோடி டன் எல்.பி.ஜி.யை பயன்படுத்துகிறது. இதில் சுமார் 87% வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. மொத்த தேவையில் ஏறக்குறைய 60-67% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் பெரும்பகுதி (சுமார் 85-90%) ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது.

தற்போதைய பதற்றம் காரணமாக இந்த வழித்தடு தடைபடுவதால், இறக்குமதி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசு எந்த அளவுக்கு தட்டுப்பாடு இல்லை என உறுதியளித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக சிலிண்டர்களில் சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இதை சமாளிக்க, பெட்ரோலியம் அமைச்சகம் மார்ச் 8 அன்று உத்தரவு பிறப்பித்து, சுத்திகரிப்பு நிலையங்களில் எல்.பி.ஜி. உற்பத்தியை 10-25% வரை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு நாளை அவசர ஆலோசனை!
மேலும், வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, வணிக பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள் மற்றும் கறுப்புச் சந்தை வியாபாரிகள் இச்சூழலை பயன்படுத்தி விலையை உயர்த்தி, மக்களை குழப்பி வருகின்றனர். பல மாநிலங்களில் அதிக விலைக்கு சிலிண்டர்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், உண்மை சரிபார்ப்பு மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் நேற்று முன்தினம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன்படி, மாநிலங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வீட்டு சிலிண்டர் விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அதிகாரிகளை உள்ளடக்கிய 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் பிரச்சினைகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து, ஒருங்கிணைப்பு செய்து, உண்மை சரிபார்ப்புடன் விரைவான தீர்வுகளை உறுதி செய்கிறது.
சமூக ஊடகங்களையும் தொடர்ந்து கண்காணித்து, தவறான தகவல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது. இந்த நடவடிக்கைகள் மூலம், வீட்டு சமையலுக்கு எல்.பி.ஜி. தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. மக்கள் பதற்றமடையாமல், அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: அம்மாடியோவ் ஒரு சிலிண்டர் விலை இவ்வளவா? - இனி காலை 11 மணி முதல் 4 மணி வரை அதிரடி மாற்றம்... ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி முடிவு...!