சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும், வெப்பத்தின் தீவிரம் குறையாத நிலை தொடர்கிறது. குறிப்பாக கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து 104 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 103.82 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2 முதல் 3.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருப்பதாக வானிலை தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடியும், பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்தும் வருகின்றனர்.
தொடர்ச்சியாக ஆறாவது நாளாக வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், பொதுவாக தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு வெப்பநிலை படிப்படியாக குறையும். ஆனால் தற்போது வங்கக்கடல் பகுதியில் எந்தவித தாழ்வுப்பகுதியும் உருவாகாததால், மேகமூட்டம் மற்றும் மழை உருவாகும் சூழல் இல்லை என்றார்.
இதையும் படிங்க: எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!

வங்கக்கடலில் தாழ்வுப்பகுதி உருவானால், அதனைத் தொடர்ந்து மேகக்கூட்டங்கள் அதிகரித்து வெப்பம் குறையும். ஆனால் தற்போது அத்தகைய வானிலை அமைப்பு இல்லாததால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்னும் சுமார் 10 நாட்களுக்கு வெப்பத்தின் உஷ்ணம் தொடர வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 10-ஆம் தேதிக்கு பிறகு வெப்பச்சலன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த மழை ஏற்பட்டால் ஓரளவு வெப்பம் குறைந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் சென்னைவாசிகள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும், வெயிலின் உச்ச நேரங்களில் பாதுகாப்பாக இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெப்பத்தின் தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டு கேஸ் சிலிண்டர் விலையேற்றம்! விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி! நடுத்தர மக்கள் அவதி!