தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்தியது தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் கண்காணிப்பகம் மூலம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, தவெக தலைவர் விஜய் குழந்தைகளிடம் உரையாடினார். அப்போது, "உங்கள் பெற்றோர்களையும், பெரியவர்களையும் விசிலுக்கு (கட்சியின் சின்னம்) ஓட்டுப்போடச் சொல்லுங்கள்" என அவர் பரப்புரை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

குழந்தைகளின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் அரசியல் பரப்புரையில் அவர்களை ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் எனச் சுட்டிக்காட்டியுள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தனது கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
இதையும் படிங்க: மத நல்லிணக்க பயணம்: திருச்சியில் மாற்றுத்திறனாளி சிறுவனை மகிழ்வித்த தவெக தலைவர் விஜய்!
குழந்தைகளைத் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தியதற்காக விஜய் மற்றும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுவினர் மீது தமிழகக் காவல்துறை உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பரப்புரையில் ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட மற்றும் குழந்தைகளின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் உள்ள அனைத்து வீடியோக்களையும் சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையமும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகள் விஜய்க்குச் சாதகமாக வந்து கொண்டிருக்கும் வேளையில், குழந்தைகள் உரிமை ஆணையத்தின் இந்தப் புகார் மற்றும் பரிந்துரை தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் விஜய்யின் மெகா பிரசாரம்: 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி! 3 இடங்களுக்கு முட்டுக்கட்டை!