தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் அவர்கள், நாளை (ஏப்ரல் 6) சென்னையில் ஐந்து முக்கிய இடங்களில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தற்போது வரை இரண்டு இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மாலை இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், விஜய்யின் பிரசார இடங்கள் குறித்த இந்தத் தகவல் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை வழங்கியுள்ள அனுமதியின்படி, நாளை கீழ்க்கண்ட நேரங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம்: வில்லிவாக்கம்: சிட்கோ நகர் சந்திப்புப் பகுதியில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தி.நகர்: முத்துரங்கன் சாலை சந்திப்பில் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க: அன்பும் மனிதநேயமும் வளரட்டும்! ஈஸ்டர் திருநாளில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

கீழ்க்கண்ட மூன்று இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை: விருகம்பாக்கம்: கோயம்பேடு ஜெய் நகர் பார்க் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அசோக் நகர்: நடுக்கோவில் தெரு பகுதியில் பிரசாரம் செய்ய இதுவரை பச்சைக்கொடி காட்டப்படவில்லை. திருமங்கலம்: டி.வி. நகர் பகுதியிலும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படும் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுக்கப்பட்ட மூன்று இடங்களிலும் மீண்டும் அனுமதி கிடைக்க 99 சதவீதம் வாய்ப்பு இல்லை எனப் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகத் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்று இடங்கள் அல்லது நேர மாற்றங்கள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் முறையிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் நேற்று பிரதமர் மோடி சென்னையில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தியதைத் தொடர்ந்து, நாளை விஜய்யின் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்குமா அல்லது இடங்கள் மாற்றப்படுமா என்பது இன்று இரவு தெரியவரும்.
இதையும் படிங்க: பெரம்பூரில் 51, திருச்சியில் 52 – தவெக தலைவர் விஜய்யின் பிரமாண பத்திர தகவலால் கிளம்பும் புதிய சர்ச்சை!