தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் அலுவலகம் தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடிக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், புதிய அலுவலகத்திற்கான நிர்வாக மற்றும் அலுவலக வசதிகளை ஏற்படுத்தும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் மூன்று டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஏ பிளாக், பி பிளாக் மற்றும் சி பிளாக் என மூன்று பிரிவுகளாக தனித்தனியாக டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த மூன்று டெண்டர்களுக்கான அறிவிப்பு கடந்த 13ஆம் தேதி செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. ஆனால், நான்கு நாட்களுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதிதான் அந்த டெண்டர் ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!
தமிழ்நாடு அரசின் டெண்டர் விதிமுறைகளின்படி, செய்தித்தாளில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட மறுநாளே அது தொடர்பான தகவல்கள் இணையதளத்திலும் வெளியிடப்பட வேண்டும். ஆனால், தற்போது நான்கு நாட்கள் தாமதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பது முதல் விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட செய்தித்தாள்களில் ஒவ்வொரு பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, ஏ பிளாக்கில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் மதிப்பு ரூ.2 கோடியே 41 லட்சம் என்றும், பி பிளாக்கிற்கான பணிகளின் மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சம் என்றும், சி பிளாக்கிற்கான பணிகளின் மதிப்பு ரூ.1 கோடியே 12 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூன்று டெண்டர்களின் மொத்த மதிப்பு இதுவாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் டிஎன் டெண்டர்ஸ் இணையதளத்தில் டெண்டர் வெளியிடப்பட்டபோது, ஒவ்வொரு பணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட டெண்டர் மதிப்பு குறிப்பிடப்படவில்லை. டெண்டர் ஆவணங்கள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த டிஎன் டெண்டர்ஸ் இணையதளத்தின் மூலமாகத்தான் ஒப்பந்ததாரர்கள் தங்களது டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பணியின் மொத்த மதிப்பு குறித்த தகவல் அதில் இடம்பெறாதது இரண்டாவது விதிமீறலாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது விதிமீறல் டெண்டரைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பாக எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற டெண்டர் விதிகளின்படி, ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள பணிகளுக்கான டெண்டர்களைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ரூ.2 கோடிக்கு குறைவான பணிகளுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்.
இந்த மூன்று டெண்டர்களில் இரண்டு டெண்டர்கள் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புடையவை. மற்றொரு டெண்டர் ரூ.2 கோடிக்கு குறைவான மதிப்புடையது.
ரூ.2 கோடிக்கு குறைவான மதிப்புடைய டெண்டருக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது விதிமுறைகளின்படி சரியானது. ஆனால், ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புடைய மற்ற இரண்டு டெண்டர்களுக்கும் வெறும் 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி அவற்றுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே, இதுவும் ஒரு விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது.
இதன்படி, முதலமைச்சரின் புதிய அலுவலகத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள டெண்டர்களில் அடுத்தடுத்து பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, முதலமைச்சர் அலுவலகத்திற்கான பணிகள் டெண்டர் நடைமுறைகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டரிலும் இதுபோன்ற பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக கூறப்படுவது மேலும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!