கோவை மாநகராட்சியில் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகின்றன. குறிப்பாக, 33வது வார்டு கவுண்டம்பாளையத்தில் ரூ.3.36 கோடி செலவில் கட்டப்பட்ட 'முதல்வர் படைப்பகம்' வளாகத்தில், டெண்டர் விடாமல் ரூ.1.35 கோடி அளவுக்கு கூடுதல் பணிகள் 'அட்வான்ஸ் ஒர்க்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதல்வர் விஜய் வசம் உள்ள நிலையில், அரசு வெளிப்படைத் தன்மையுடன் டெண்டர் முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில் கோவை மாநகராட்சியில் இந்த விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வெள்ளம், தீ விபத்து போன்ற அவசர பேரிடர் சமயங்களில் மட்டுமே அட்வான்ஸ் ஒர்க் செய்ய அனுமதி உண்டு. கட்டடப் பணிகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்தக் கூடாது என்பது தெளிவான விதி.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் போட்டோவை என் ஆபிசில் வைக்க மாட்டேன்! அடம்பிடிக்கும் கோவை திமுக மேயர்!
ஆனால், முதல்வர் படைப்பகத்தில் ரூ.85 லட்சம் அளவுக்கு அபிவிருத்தி பணிகளும், இரண்டாவது தளத்தில் ரூ.50 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கும் பணியும் டெண்டர் இல்லாமல் அட்வான்ஸ் ஒர்க் மூலம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கான பணம் இதுவரை மாநகராட்சியால் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவில்லை.

மேலும், 22ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் 40 பணிகளுக்கு இ-டெண்டர் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதில், முதல்வர் படைப்பகத்தில் ஏற்கெனவே அட்வான்ஸ் ஒர்க் என்ற பெயரில் செய்யப்பட்ட ரூ.1.35 கோடி பணிகளுக்கும் இப்போது டெண்டர் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை நம்பி பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள், தங்கள் செலவுகளை எப்படி மீட்டெடுப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மாநகராட்சி உதவி பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் ஒப்புதல் இல்லாமல் டெண்டர் இன்றி எந்தப் பணியையும் செய்ய அனுமதிக்க முடியாது. இந்த விதிமீறல் சட்டப்படி குற்றமாகும். தெரிந்தே இத்தகைய முறைகேடுகளை அனுமதித்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சி முழுவதும் இதுபோன்று எத்தனை பணிகள் டெண்டர் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன என முழுமையான விசாரணை நடத்தி, ஏதேனும் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால் அரசு கஜானாவுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று அரசியல் மற்றும் நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!