கோவையில் கழிவுநீர் தொட்டியில் மோட்டார் ரிப்பேர் செய்ய இறங்கிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இருவர், கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர் ஆங்காங்கே கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலம் உக்கடம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மண்டலம் 69வது வார்டுக்கு உட்பட்ட சாய்பாபா காலனி பாரதி பார்க் 1வது வீதியில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது. இதில் 60 எச்.பி. திறன்கொண்ட மோட்டார் மூலம் கழிவுநீர் பாதாள சாக்கடைக்குள் உந்தப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் டு கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி... எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, வானதிக்கு காத்திருக்கும் ஆப்பு...!
இதனிடையே அங்கு பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதானதை அடுத்து, நேற்று மாலை அதனை சரிசெய்து கிரேன் மூலம் மீண்டும் தொட்டிக்குள் இறக்கும் பணியில் மாநகராட்சி தற்காலிக ஒப்பந்த ஊழியர்களான ரத்தினபுரியைச் சேர்ந்த அர்ஜுன்குமார் (38), மற்றும் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மோட்டாரை கீழே இறக்கி பொருத்திவிட்டு, இருவரும் ஏணிப்படிகள் மூலம் மேலே ஏறிக்கொண்டிருந்த போது, அர்ஜுன்குமாரின் தலை உள்ளேயிருந்த பைப்பில் இடித்ததில், நிலைதடுமாறி தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
உடன் சென்ற சுரேஷ், அவரை காப்பாற்றுவதற்காக கீழே இறங்கிய போது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கமடைந்து, அவரும் தொட்டிக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள், தொட்டியில் இருந்த கழிவுநீரை, கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்டன.
இதனிடையே இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், இரு தொழிலாளர்களின் உறவினர்களிடையே ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்ககிட்ட கத்தி கத்தி சாகுறதுக்கு ஒரேடியா போயிடலாம்..! பரப்புரையில் சீமான் ஆதங்கம்..!!