திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான தருணமாகும். அந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவர்களின் திருமண நாளில் அரசின் சார்பாக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்க உள்ளார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ₹812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நமது கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் வயிற்றுப் பசியை மட்டுமின்றி கல்விப் பசியையும் போக்கினார். குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீது பேரன்பு கொண்ட நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" எனப் பெயரிட்டு, பெருந்தலைவருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், கூடுதலாக 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்காக, 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ₹710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான முதுமை மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து, முதியோருக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதற்காக, மூத்த குடிமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள், தகுதியான பராமரிப்பாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும்.
முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் தங்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக ₹6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், நூலகம், யோகா, தியான வகுப்புகள் மற்றும் உட்புற விளையாட்டு (Indoor Games) வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் உருவாக்கப்படும். மூத்த குடிமக்களின் மக்கள் தொகை அடிப்படையில் இந்த மாவட்டங்கள் தேர்வு செய்யப்படும்.
தமிழ்நாடு அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற மகளிரின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு "வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு இலவசமாக5 ஆடுகள் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 30,000 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். இத்திட்டத்திற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?