விருதுநகர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் - சாத்தூர் சாலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) சார்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது
நீட் தேர்வு குறித்த கேள்விக்கு? பதிலளித்த அவர், "நீட் தேர்வைக் கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சிதான் எனச் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியது முற்றிலும் தவறானது. இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைத்து மருத்துவப் படிப்பிற்கான இடங்களை அதிகப்படுத்தும் நோக்கில், அதே நேரத்தில் மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வும் இருக்க வேண்டும் என மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு திட்டமாகக் கொண்டுவந்தது. அதை அப்போதைய மத்திய அரசு பரிசீலனை செய்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு சட்டமாக மாற்றப்பட்டது.
நீட் அமைக்கும் போது எல்லாக் கட்சிகளின் பார்வையும் இருந்தது. அதிமுகவில் அப்போது தம்பிதுரை, செம்மலை உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் இருந்தார்கள். அப்போது 'நீட் வேண்டாம்' என்று யாருமே கருத்து தெரிவிக்கவில்லை. நீட் தேர்வு ஒரு தரமான மருத்துவக் கல்வியை உருவாக்கும் என எல்லோரும் நினைத்தோம். ஏழை எளிய மக்களுக்கு நியாயமான முறையில் கல்வி கிடைக்கும், நன்கொடை இல்லாத அமைப்பை உருவாக்கும் என நம்பினோம்.
இதையும் படிங்க: பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்..! "அரசியல் ஆதாயம்"..! சட்டப்பேரவையில் சிவி சண்முகம் உரை..!
ஆனால், நீட் தேர்வுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்ததால் காங்கிரஸ் அதைச் சட்டமாக நிறைவேற்றவில்லை. 2016-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசுதான் நீதிமன்றத்திற்கு சென்று அதைச் சட்டமாக நிறைவேற்றி நீட் தேர்வைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தது. 2017-ஆம் ஆண்டு தமிழகத்தில் அனிதா என்ற மாணவி முதல் தற்கொலை செய்துகொண்டார்.
அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது சட்டமன்றத்தில் பேசுவதை 2016, 2017, 2018, 2019, 2020, 2021-ஆம் ஆண்டுகளில் பேசியிருக்கலாம். எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாகக் காங்கிரஸ் மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு, தான் முதல்வராக இருந்தபோது என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.
மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா கேட்டுக்கொண்டதால் காங்கிரஸ் அதைக் கொண்டுவந்தாலும், அதை நிறைவேற்றவில்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை 'காலுக்கு ஏற்ற காலணி இருக்க வேண்டும்' என நினைக்கும் கட்சி; 'காலணிக்கு ஏற்ற கால் இருக்க வேண்டும்' என நினைக்காத கட்சி. புதிய மாற்றம் வரும்போது தவறு நடந்தால் அதைத் திரும்பப் பெறும் தகுதியும் மனநிலையும் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி.
ஆனால், வீம்பு பிடித்துக்கொண்டு பாஜக அரசு தாங்கள் கொண்டுவந்த சட்டம், நாங்கள் கொண்டுவந்த நீட் சரியாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறது. 'தேசிய தேர்வு முகமை' (NTA) என்ற மோசடி ஏஜென்சிதான் நீட் குளறுபடி உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கியக் காரணம். வினாத்தாள் கசிவு போன்ற அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தேசிய தேர்வு முகமைதான் காரணம். அது இந்தியாவில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இத்தனை மாணவர்களின் தற்கொலைக்கும் காரணமும் தேசிய தேர்வு முகமைதான். அதன் அமைப்பை மாற்ற வக்கில்லாதவர்கள் இத்தனை பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
'நீட் வேண்டுமா? வேண்டாமா?' என்பதை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் நிலை எங்கு வந்து நிற்கிறது? பாஜக மீண்டும் நீட் சட்டத்தைக் கொண்டுவந்தபோது உடனிருந்து விளக்கு பிடித்தது யார்? பாஜக நீட் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?
மாணவி அனிதாவின் மரணத்திற்குப் பின் தமிழகமே பொங்கி எழுந்ததே, அப்போது எடப்பாடி பழனிசாமி என்ன செய்துகொண்டிருந்தார்? பழி போடுவது என்பது தவறான விஷயம். ஒரு மாற்றம் வரும்போது தவறு நடந்தால் அதைத் திருத்திக்கொள்வது அரசின் கடமை. ஆனால், நீட் விவகாரத்தில் இவ்வளவு தவறு நடந்தும் மாற்றத்தைச் செய்ய மோடி அரசு தயாராக இல்லை; 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' எனச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
நீட் தேர்வு குறித்துத் தேவையற்ற கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் மோடி அரசை எதிர்த்துப் பேச எடப்பாடி பழனிசாமிக்குத் தில்லும் தைரியமும் உள்ளதா? 'நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்றால் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை நிறைவேற்ற வாக்களிக்க மாட்டோம்' என மோடியிடம் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கும் அன்புமணி ராமதாஸிற்கும் தைரியம் உள்ளதா?
மோடி சொல்லும் அனைத்தையும் தமிழகத்தில் வந்து நியாயப்படுத்த எடப்பாடி பழனிசாமியும், அன்புமணி ராமதாஸும் தயாராக உள்ளார்கள். தொகுதி மறுவரையறை செய்தால் தமிழகத்தில் மகளிருக்கு 59 சீட் கிடைக்கும், 117 சீட் கிடைக்கும் எனக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாஜக சொல்ல முடியாத காரணங்களைச் சொல்லக்கூடிய கட்சிகளாக அமித் ஷாவின் அதிமுகவும், அன்புமணியின் பாமகவும் மாறியுள்ளன."
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு