"ராகுல் காந்தியின் உரையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன்; அதை விமர்சிப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை மக்களே முடிவு செய்துகொள்ளட்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் : தவெக வெற்றி என வந்துள்ள கருத்துக்கணிப்பு வெரும் திணிப்பு மட்டுமே. ஒரே இரவில் மக்கள் மனம் மாறிவிடாது. கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழகத்தில் சிறப்பான பணிகள் நடைபெற்றுள்ளன. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி மிகச் சிறப்பாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் தமிழக முதல்வரும் அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த உழைப்பு வீண் போகாது.
தேர்தல் நடக்கும் வரை விலையேற்றம் இருக்காது என்பது பாஜகவின் வழக்கமான தந்திரம் தான். இந்தத் தேர்தல் என்று மட்டுமல்ல, அனைத்துத் தேர்தல்களின் போதும் பாஜக இப்படித்தான் செயல்படுகிறது.
இதையும் படிங்க: காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!
வேட்பாளர் தேர்வைப் பொறுத்தவரை கட்சியின் அகில இந்தியத் தலைமைக் குழு (CEC) தான் முடிவெடுத்தது. கட்சிகளில் கருத்து வேறுபாடுகளும், மனக்குமுறல்களும் இருப்பது இயல்பானதுதான். ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் பணியாற்றுவோம். கரூர் எம்.பி. ஜோதிமணியின் கருத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு, ஒருவரின் தனிப்பட்ட மனக்குமுறல்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை.
பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தியின் உரையை நான் மொழிபெயர்த்தது குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. நான் அரசுப் பள்ளியில் பயின்றவன். எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவை வைத்து நான் மொழிபெயர்ப்பு செய்தேன். இதில் தவறு காண விரும்புபவர்கள் மற்றும் இதை விமர்சனம் செய்பவர்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். காங்கிரஸ் கட்சி எப்போதும் அழிவுப்பாதையில் செல்லவில்லை, அது வலுவாகவே இருக்கிறது எனக்கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?