கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பத்மாவதி(40) இவர் அன்னூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஹரிணி (19) மேட்டுப்பாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார்.
இவருக்கு (13 வயது) சிறு வயது முதலே சுவாசக் கோளாறால், மூச்சுத் திணறல் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹரிணி அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹரிணிக்கு மூக்குப்பகுதியில் இரத்தம் வடிந்துள்ளது. இதனை அடுத்து அன்னூரில் உள்ள மருத்துவர் கிரிசங்கரின் ஐடியல் இஎன்டி (IDEAL ENT) எனும் தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஹரிணிக்கு சிடி ஸ்கேன் உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்து வருமாறு மருத்துவர் பரிந்துரைத்ததை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகளை பார்த்த ஐடியல் இஎன்டி தனியார் மருத்துவமனையின் மருத்துவர் கிரிசங்கர், ஹரிணிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹரிணிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளை அடுத்து மருத்துவர்கள் மார்ச் இறுதிக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனர். இந்நிலையில் ஹரிணி தனது கல்லூரி தேர்வு இருப்பதால் தேர்வை முடித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!
இதனை அடுத்து கடந்த 18ஆம் தேதி ஹரிணிக்கு மூக்கில் வலி அதிகமானதால் மீண்டும் அன்னூரில் உள்ள இண்டி மருத்துவர் கிரிசங்கரிடம் சென்று பார்த்துள்ளார். மருத்துவர் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அன்னூர் அருகே காட்டம்பட்டியில் உள்ள (பேரூர் அடிகளார் மருத்துவமனை) தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.
இதனை அடுத்து ஹரிணி குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் மருத்துவ செலவிற்கான தொகையை தயார் செய்து கொண்டு கடந்த 22 தேதி அன்று காலை அன்னூரில் இருந்து காட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு மதியம் சுமார் 2 மணி அளவில் அறுவை சிகிச்சை துவங்கி 1:30 மணி நேரத்திற்கு பிறகு ஹரிணியின் இதயத்துடிப்பு குறைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு போதுமான மருத்துவ உபகரண வசதி இல்லாததால், கோவில்பாளையத்தில் உள்ள (KMCH) தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஹரிணியை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு ஹரிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த ஹரிணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஹரிணியின் இறப்பிற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம். போதுமான உபகரணங்கள் இல்லாத மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நினைத்த கிரிசங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஹரிணியின் உடலை பெறமாட்டோம். உயிர்காப்பு உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு அனுமதித்த தனியார் மருத்துவமனை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோவை- சத்தி தேசிய நெடுஞ்சாலையில், காட்டம்பட்டி பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் போலீசார் ஹரிணியின் உறவினர்களிடம் சமரசம் பேசி சாலை மறியலை கைவிடச் செய்து அவர்களிடம் சமரசம் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!