தமிழக சட்டமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஆதரவாகத் தாங்கள் வாக்களிக்கப் போவதாக அதிமுகவின் அதிருப்தி குழுத் தலைவர் சி.வி. சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், "கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என இன்று மாலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் சி.வி. சண்முகம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்:
தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எனவே, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் 17 உறுப்பினர்களே உள்ள நிலையில், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 30 உறுப்பினர்கள் ஆதரவு தருவது தவெக-வின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இபிஎஸ் தரப்பு கூறி வரும் நிலையில், பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் தன்பக்கம் இருப்பதால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அதிருப்தி அணி நம்புகிறது.
30 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட இந்த அணியை அதிகாரப்பூர்வ அதிமுகவாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அங்கீகரிப்பாரா அல்லது கொறடா உத்தரவு இவர்களுக்குப் பொருந்துமா என்பது நாளை காலையே தெரியவரும்.
நாளை காலை 9:30 மணிக்கு வாக்கெடுப்பு தொடங்கவுள்ள சூழலில், அதிமுகவின் இந்த அதிரடி ஆதரவு முதலமைச்சர் விஜய்க்கு நிம்மதியை அளித்துள்ளது. "எதிர்க்கட்சிகளைத் தோழமைக் கட்சிகளாகக் கருதுவோம்" என்ற முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு இணங்கவே இந்த ஆதரவை வழங்குவதாக அதிருப்தி அணியினர் தெரிவித்துள்ளனர்.
கோட்டை வளாகத்தில் நாளை அரங்கேறப் போகும் இந்த ‘பலப்பரிட்சை’, அதிமுகவின் எதிர்காலத்தையும், தவெக அரசின் பலத்தையும் ஒருசேரத் தீர்மானிக்கப் போகிறது.
இதையும் படிங்க: மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?