திருப்பத்தூர் தொகுதியில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ. திரு. சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகக் கூறி, சீனிவாச சேதுபதி நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க இன்று காலை இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையால் தவெக அரசுக்குச் சட்டமன்றத்தில் ஒரு வாக்கு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்களிக்கும் உரிமையைத் தடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. தேர்தல் வழக்குகளைத் தேர்தல் மனு (Election Petition) மூலமே சந்திக்க வேண்டும். ரிட் மனு (Writ Petition) மூலம் ஒரு எம்.எல்.ஏ-வின் கடமைகளுக்குத் தடை விதிப்பது சட்ட விதிகளுக்குப் புறம்பானது.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால், இந்த மனுவை இன்றே அல்லது நாளை அதிகாலை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனத் தவெக வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், சீனிவாச சேதுபதியின் ஓட்டு மிகவும் முக்கியமானது. உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கினால் மட்டுமே அவர் நாளை வாக்களிக்க முடியும். இதனால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இப்போது தில்லியின் பக்கம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு ஓட்டில் தோற்ற பெரியகருப்பன்..! வழக்கு தொடரப்படும்... உதயநிதி உறுதி..!