கர்நாடக மாநிலத்தில் கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா நகரில் துணிக்கடை நடத்தி வந்த ஒருவர், தனது மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்டியா டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்த பிரபாகர், அங்கு துணிக்கடை நடத்தி வந்தார். அவரது மனைவி ஜோதி. இவர்களின் மகன் சந்தோஷ், தந்தையின் தொழிலுக்கு உதவியாக கடையில் பணியாற்றி வந்தார். சந்தோஷுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றிருந்தது. திருமணத்திற்கு பிறகு அவர் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை சந்தோஷின் மனைவி எழுந்தபோது கணவர் வீட்டில் இல்லை. அவர் வழக்கம்போல் கடைக்கு சென்றிருப்பார் என நினைத்து தனது வேலைகளை கவனித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாமியார் ஜோதி அறையில் இருந்து வெளியே வராததால், அவரை எழுப்புவதற்காக அறைக்குச் சென்றார். அப்போது ஜோதி மற்றும் சந்தோஷ் இருவரும் படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: நலம் விசாரிக்க வந்து தீயில் கருகிய 8 உயிர்கள்! நெஞ்சை பிழியும் சோகம்! டெல்லி தீ விபத்தின் கோரம்!

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில், அருகிலிருந்த துணிக்கடையில் பிரபாகர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், அதிகாலை நேரத்தில் பிரபாகர் தனது மனைவி ஜோதியின் கழுத்தை நெரித்து கொன்றதாகவும், சத்தம் கேட்டு வந்த மகன் சந்தோஷையும் தாக்கி கொலை செய்ததாகவும் தெரியவந்தது. பின்னர் அவர் கடைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் மற்றொரு அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மருமகள் இந்த சம்பவத்தை அறியாமல் இருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
மேலும் விசாரணையில், பிரபாகர் எழுதியிருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், துணிக்கடை தொழில் நஷ்டத்தில் சென்றதாலும், கடன் சுமை அதிகரித்ததாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தனியார் நிதி நிறுவனங்களின் நெருக்கடியும் தனது முடிவுக்கு காரணம் என அவர் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மண்டியா பகுதி மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 4-5 பேரின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் பாஜக! அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த அமர் பிரசாத் ரெட்டி புகார்!