நீட் தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீட்டு குளறுபடிகள் உள்ளிட்ட கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், பல்வேறு மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் நீண்ட நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி போலீசாரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது சிகிச்சையில் இருக்கும் அவர், முன்பே வெளியிட்ட அறிக்கையில் தனது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகள் உறுதியளித்தால் உண்ணாவிரதத்தை முடிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில், ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர்.
இதையும் படிங்க: உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார்! ஆனால் 3 நிபந்தனைகள்! 21 நாள் போராட்டத்திற்கு பிறகு சோனம் வாங்சுக் அதிரடி!

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் டெல்லி போலீசார் அந்த பேரணிக்கு அனுமதி மறுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தடையை மீறி பேரணியை தொடங்க முயன்ற சில போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர லேசான தடியடி நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த நடிகை ஷபானா அஸ்மி, மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும் ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும், சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, அகில இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று மாணவர் செயற்பாட்டாளர்கள் 23 நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை உடல்நலக் காரணங்களால் இன்று முடித்துக் கொண்டனர். முக்கிய பிரமுகர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், நீட் தேர்வு மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பான விவாதங்களை மீண்டும் தேசிய அளவில் தீவிரப்படுத்தியுள்ளது. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எவ்வாறு எதிரொலிக்கும் என்பது தற்போது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் முக்கிய கவனமாக உள்ளது.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!