தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை மத்தியத் தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளர் சுந்தர். சி, அப்பகுதியில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்குப் பிரம்மாண்டமான ஊழல் நடைபெற்றிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். "வரி வருவாயில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுகிறது" என்று அவர் சாடினார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாநகரின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், மதுரை மாநகரம் தற்போது சுத்தமாகவே இல்லை. குப்பைகள் அகற்றப்படாமல், அடிப்படை வசதிகள் கூடச் செய்யப்படாமல் மாநகராட்சி முடங்கிக் கிடக்கிறது" எனப் புகார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் துரோகிகள் பெருகிவிட்டார்கள்! மதுரையில் சசிகலா ஆக்ரோஷ பேச்சு!
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை இலக்காகக் கொண்டு பேசிய சுந்தர். சி, "அமைச்சரைச் சுற்றி இருப்பவர்கள் யாரும் சுத்தமாக இல்லை. அமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ள ஒரு மாநகராட்சியிலேயே இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடப்பது வேதனை அளிக்கிறது" என்று விமர்சித்தார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மத்தியத் தொகுதியில் திமுகவின் கோட்டையைத் தகர்ப்போம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். "மதுரை மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டியவர்களுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றும் அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.
மதுரை மாநகராட்சியில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் முடக்கம் ஆகியவற்றை முன்வைத்து அதிமுக வேட்பாளர் சுந்தர். சி ஆற்றிய இந்தப் பேச்சு, அத்தொகுதியில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!