தமிழக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிகவின் அரசியல் பயணத்தில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் எனக் குறிப்பிட்டார்.
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான பிறகு முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நீண்ட கால கனவு இன்று நிறைவேறியுள்ளது. தேமுதிகவின் வெற்றிப் பயணம் இனி தொடரும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
"வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும். அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களே மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்" என அவர் உறுதிபடக் கூறினார். காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, இன்னும் இரண்டு நாட்களில் தேமுதிக-வை அழைப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்களின் கருத்தைக் கேட்டு, மக்கள் விரும்பும் கூட்டணியிலேயே தேமுதிக இணைந்துள்ளது என அவர் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடக்கம்: அண்ணா அறிவாலயத்தில் ஐ.யூ.எம்.எல் உடன் இன்று பேச்சுவார்த்தை!
"தேர்தல் நேரங்களில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். ஆனால், 2026 தேர்தலில் திமுக கூட்டணியே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும்" எனத் தெரிவித்தார். உலகளாவிய போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு குறித்து கவலை தெரிவித்த அவர், இது தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் இது குறித்துத் தேமுதிக குரல் எழுப்பும் என்றும் கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேமுதிக சார்பில் முதன்முறையாகப் பொறுப்பேற்க உள்ள எல்.கே. சுதீஷின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் தேமுதிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "திமுக கூட்டணி தாலி கட்டிய மனைவியை போன்றது" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்!