சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியின் அமைப்பு கட்டமைப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கட்சி நிர்வாகிகளுக்கு வயது வரம்பு மற்றும் பதவிக்கால கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய விதிகளின்படி, கிளைக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டக் கழகச் செயலாளருக்கு 50 வயதும், பேரூர், நகர, ஒன்றிய மற்றும் பகுதி கழகச் செயலாளர்களுக்கு 60 வயதும், மாவட்டக் கழகச் செயலாளருக்கு 70 வயதும் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த நிர்வாகப் பொறுப்புகளில் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் நீண்ட காலமாக முக்கிய பதவிகளில் இருக்கும் நிர்வாகிகளுக்கு புதிய விதிகள் சவாலாக மாறியுள்ளன.
இதையும் படிங்க: தயாநிதி மாறன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தொலைத்தொடர்பு செயலரை சாட்சியாக அழைக்க அனுமதி!
திமுகவின் கட்சி மாவட்டங்களும் மறுசீரமைக்கப்பட உள்ளன. வருவாய் மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் மொத்தம் 110 கழக மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘மாநகரச் செயலாளர்’ என்ற தனிப்பட்ட பொறுப்பு இனி இருக்காது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால், 70 வயதை கடந்துள்ள தற்போதைய மாவட்ட செயலர்கள் பலர் அந்தப் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படலாம். காஞ்சிபுரம் தெற்கு க.சுந்தர், ராணிப்பேட்டை ஆர்.காந்தி, திருவண்ணாமலை தெற்கு எ.வ.வேலு, விழுப்புரம் வடக்கு செஞ்சி மஸ்தான், சேலம் கிழக்கு எஸ்.ஆர்.சிவலிங்கம், ஈரோடு தெற்கு சு.முத்துசாமி, தஞ்சாவூர் வடக்கு சாக்கோட்டை க.அன்பழகன், புதுக்கோட்டை தெற்கு ரகுபதி, மதுரை மாநகர் கோ.தளபதி, தேனி தெற்கு நா.இராமகிருஷ்ணன், விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தூத்துக்குடி தெற்கு அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மேற்கு இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோரின் பதவிகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், இவர்களில் யார் பதவியில் இருந்து மாற்றப்படுவார்கள் என்பது குறித்து கட்சி தலைமையிலிருந்து தனிப்பட்ட அறிவிப்பு வெளியாகாத நிலையில், தற்போதைக்கு இதை சாத்தியமான மாற்றமாகவே பார்க்க வேண்டும்.
மறுபுறம், அனுபவம் வாய்ந்த சீனியர்களுக்கு கட்சியின் பிற முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வயதான நிர்வாகிகளை முற்றிலும் ஒதுக்காமல், அமைப்பில் புதிய தலைமுறைக்கு இடமளிப்பதே இந்த மாற்றங்களின் நோக்கமாக இருக்கலாம் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: மா. செ. எண்ணிக்கை உயர்வு.? பரபரப்பு அரசியல் களம்... திமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்..!!