தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் பலமான கோட்டையாகக் கருதப்படும் மேற்கு மண்டலத்தைக் கைப்பற்ற திமுக தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. இன்று நடைபெற்ற மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனச் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால், வரும் தேர்தலில் WEST-லயும் திமுகதான் BEST என்பதை நாம் நிரூபித்துக் காட்டுவோம். இது இனி திமுகவின் கோட்டையாக மாறும் எனச் சூளுரைத்தார். பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பட்டியலிட்ட அவர், மக்களிடம் இருப்பதைப் பறிக்கும் ஆட்சி ஒன்றிய பாஜக ஆட்சி ஆனால், மக்களுக்கு எப்போதுமே வாரி வழங்குகின்ற ஆட்சி நமது திராவிட மாடல் ஆட்சி. இதுதான் இருவருக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்" என முழங்கினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை டயர் புகழ் பழனிசாமி என எள்ளி நகையாடிய உதயநிதி, ஒன்றிய பட்ஜெட்டை முழுமையாக வாசித்து முடிப்பதற்கு முன்பே, டயர் புகழ் பழனிசாமி அதை பாராட்டி ஃபயர் விடுகிறார். நாம் இதுவரை முரட்டுத் தொண்டர்களைத் தான் பார்த்திருப்போம், ஆனால் இப்போது மோடிக்கு ஒரு முரட்டு அடிமையாக இபிஎஸ் இருக்கிறார் எனச் சாடினார்.
இதையும் படிங்க: "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!
பாஜகவின் அரசியலைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், நீங்கள் எவ்வளவுதான் முகத்தில் பெயிண்ட் அடித்தாலும், தமிழ்நாடு மக்கள் உங்கள் முகங்களில் கரியைத் தான் பூசுவார்கள். பாஜகவின் கலவர அரசியலைத் தமிழ் மண் ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரித்தார்.
திமுக இளைஞரணி எப்பொழுதும் களத்தில் முன்னிற்கும் என உறுதி அளித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கும் டெல்லியின் ஆதிக்கத்திற்கும் இடையிலான போர் என்பதால், நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!