நாகர்கோவில் சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் இல்லத்திற்குத் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்கள் நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைத்துறை நிர்வாக நடைமுறைகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தற்போதைய சூழலில், நாகர்கோவில் சிறை மரணச் சம்பவம் அரசியல் தளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது. 200 கிராம் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து, மூன்று சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி ஈத்தங்காடு பகுதியில் உறவினர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கனிமொழி எம்பி இன்று அங்கு நேரில் சென்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியில் உள்ள சபரிவர்மனின் வீட்டிற்குச் சென்ற கனிமொழி எம்பியிடம், உயிரிழந்த இளைஞரின் தாயார் மற்றும் உறவினர்கள் தங்களுக்கு நேர்ந்த அநீதியைக் கூறி கண்ணீர் மல்க முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி விசாரணை கைதி சபரிவர்மனின் மரணம் மிகவும் கொடூரமானது. இதுவரை இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சரோ, அல்லது அரசின் சார்பிலோ யாருமே இந்த ஏழைக் குடும்பத்தினருக்கு நேரில் வந்து ஒரு ஆறுதல்கூட சொல்ல முன்வரவில்லை. முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ இந்தச் சம்பவம் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காப்பது நம்ப முடியாததாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் என்ன? தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கூட இந்த அரசுக்கு இவ்வளவு தயக்கம் ஏன்? அவர்களுக்கு இன்னும் முறையான நியாயம் கிடைக்கவில்லை என்று கனிமொழி எம்பி அரசுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
இதையும் படிங்க: "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!
இதையும் படிங்க: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!