தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களில் உறுப்பினர்கள் உறவுமுறை சார்ந்த சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் இந்நேரத்தில், சில உறுப்பினர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் அடிக்கடி சலசலப்பு ஏற்படுவதுண்டு.
சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகள் ரீல்ஸ் வடிவில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன.
ஒரு திமுக உறுப்பினர் பேசும்போது ‘மாமா’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதால், அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார். இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே கட்சியின் அக்கறை. இந்தப் பின்னணியில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!
அப்போது அவர், “சட்டப்பேரவையில் மாமா, மச்சான் போன்ற உறவுமுறைச் சொற்களை வைத்துப் பேசக்கூடாது” என எம்.எல்.ஏ.க்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தற்போதைய சட்டமன்ற நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது, தானும் மு.க. ஸ்டாலினும் பேரவைக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கூட்டத்தில் கழகத்தின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு தொடர்பான பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்துக் கழகத்தில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் நோக்கில், கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 ஆகவும், ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும், தேவைக்கேற்ப பிற இடங்களிலும் வட்டக்கழகங்களை வலுப்படுத்த கிளைக்கழகங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் சராசரி 10 ஆயிரம் வாக்காளர்களையும், பிற மாநகராட்சிகளில் 5 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்ட வட்டக்கழகங்கள் உருவாக்கப்படும். வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 ஆகவும், இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்கலாம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.பேரூர் கழகச் செயலாளருக்கு அதிகபட்ச வயது 60, இரண்டு முறை பதவி. பகுதிக்கழகங்கள் சென்னையில் சராசரி 40 ஆயிரம் வாக்காளர்களையும், பிற இடங்களில் 30 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டிருக்கும்; செயலாளருக்கு வயது வரம்பு 60, இரண்டு முறை. நகரக் கழகங்கள் சராசரி 40 ஆயிரம் வாக்குகளுடன், செயலாளர் வயது 60, இரண்டு முறை. ஒன்றியக் கழகங்கள் 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒன்று என அமைக்கப்படும்; செயலாளர் வயது 60, இரண்டு முறை.
மாவட்ட அளவில் வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என மறுசீரமைப்பு செய்யப்படும். எஞ்சிய ஒரு தொகுதி இருந்தால் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் இணைக்கப்படும். மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்ச வயது 70, அதிகபட்சம் மூன்று முறை பதவி (முதலில் இரண்டு முறை என இருந்தது பின்னர் திருத்தப்பட்டது). இனி மாநகரச் செயலாளர் பதவி இருக்காது.
தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், 15 நாட்களுக்குள் ஒன்றியம், நகரம், பகுதி, வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட்டு, தலைமைப் பிரதிநிதி முன்னிலையில் ஒப்புதல் பெற்று அனுப்பப்பட வேண்டும். இக்கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர். பாலு, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த மறுசீரமைப்புகள் கழகத்தை இளைஞர்களின் பங்கேற்புடன் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அவையில் கலகலப்பு.. பாமக எம்எல்ஏவிடம் ஆதவ் சொன்ன ‘ஆனந்த் அண்ணன்’ வார்த்தை! நடந்தது என்ன??