வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, கெங்கநல்லூர் பகுதியில் இன்று நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம் நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு உரையாற்றினார். திரளான பெண்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை விளக்கியதோடு, தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாகச் சாடினார்.
இன்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான உயிர்களைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை, டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் கொண்டு வந்தார். இது பாமக-வின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" எனப் பெருமிதம் தெரிவித்தார். அணைக்கட்டு தொகுதி விவசாயம் நிறைந்த பகுதி என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லும் விவசாய வாகனங்களுக்குத் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

விவசாயிகள் கடுமையாக உழைத்து ஈட்டும் பணம் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்வது வேதனை அளிக்கிறது. இன்று பள்ளிக்கூடம் வரை போதை கலாச்சாரம் ஊடுருவியுள்ளது. சிறுவயதினர் போதைக்கு அடிமையாவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை தேவை" எனக் கவலை தெரிவித்தார். அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நன்மைகள் குறித்துப் பேசிய அவர், விவசாயம் என்பது ஊருக்கெல்லாம் சோறு போடும் உன்னதமான தொழில் என்பதை நினைவுபடுத்தினார்.
இதையும் படிங்க: பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!
ஆளும் திமுக அரசு எத்தனையோ கவர்ச்சிகரமான ஏமாற்றுத் திட்டங்களுடன் உங்களை நாடி வந்தாலும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; அவர்களை நம்ப வேண்டாம் எனத் தனது உரையில் குறிப்பிட்டார்.
வேலூர் மாவட்டத்தின் அடையாளமான முள்ளு கத்திரிக்காய் மற்றும் விவசாயச் செழுமையைப் பாராட்டிப் பேசிய சௌமியா அன்புமணி, பெண்களின் உரிமைகளை மீட்கப் பாமக-வுடன் கைகோர்க்குமாறு அறைகூவல் விடுத்தார்.
இதையும் படிங்க: பா.ம.க. தேர்தல் அறிக்கை... 7 பேர் கொண்ட வலுவான குழுவை அமைத்தார் அன்புமணி ராமதாஸ்!