சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான ஐயா பூமணியின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரில் அமைந்துள்ள இல்லத்தில் பொதுமக்கள், வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, அவரது பூர்வீகக் கிராமமான ஆண்டிபட்டியில் தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வணிகத்துறை அமைச்சர் மதன் ராஜா, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், கோவில்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் மலர் வளையம் வைத்து தங்களது அஞ்சலியைச் செலுத்தினர். மேலும், திரையுலகின் சார்பில் பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: கரிசல் மண்ணின் குரல் ஒடுங்கியது! மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!
எழுத்தாளர் பூமணி அவர்களுக்குத் தமிழக அரசு அறிவித்த அரசு மரியாதையின்படி, ஆயுதப்படை காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையுடன், வானத்தை நோக்கி 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர், உறவினர்கள், தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர்மல்க தங்களது இலக்கிய நாயகனுக்கு இறுதி விடை கொடுத்தனர்.
இதையும் படிங்க: கவிஞர் புவியரசுக்கு அரசு மரியாதை..! கண்ணீருடன் விடை கொடுத்த தமிழகம்!