மருத்துவப் படிப்புக்கான 'நீட்' (NEET) தேர்வினை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குக் காவல் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 4-ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 6 முக்கிய முனைகளில் இருந்து திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குத் திட்டம் வகுக்கப்பட்டது.

இந்த இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்திற்கு உரிய அனுமதி மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தித் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரிடம் (DGP) ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது. அம்மாநிலக் காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் வழித்தடங்களில் உள்ள சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டக் காவல் அலுவலகங்களில் அணுகி அனுமதியும் பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு தமிழ்நாட்டின் கொள்கை, தவெகவின் கொள்கையா இல்லையா? ஆலூர் ஷா நவாஸ் சரமாரி கேள்வி!

அதனைத் தொடர்ந்து, பரப்புரைப் பயணப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த உள்ளூர் காவல் நிலையங்களில் திராவிடர் கழக நிர்வாகிகள் முறைப்படி அனுமதி கோரிக் கடிதங்களைச் சமர்ப்பித்தனர். ஆனால், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குக் காவல் துறையினர் திடீரென அனுமதி மறுத்தனர்.
காவல் துறையின் இந்த அதிரடித் தடை உத்தரவை எதிர்த்துத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் (Writ) நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜனநாயக ரீதியில் அறவழியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும், காவல் துறையின் அனுமதி மறுப்பு உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!