சென்னை: சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று (மே 19) காலை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பழைய கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் ஒருவருக்கு எதிரான பல கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை அயனாவரம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையைத் தொடங்கினர். குறிப்பாக அயனாவரத்தில் பைனான்சியர் குல்னாஸ் பேகம் இல்லத்தில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருமங்கலம் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் லட்சுமணசாமி மற்றும் அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் ₹300 கோடிக்கும் மேல் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று பெரும் நிதி மோசடி செய்த வழக்குடன் தொடர்புடையது. பழைய கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் விவகாரத்தில் போலி ஆவணங்கள், பண மோசடி மற்றும் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!

அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த இடங்களில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பணம் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மோசடி நெட்வொர்க்கில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சோதனைக்குப் பிறகு முக்கிய நபர்களை விசாரணைக்கு அழைக்கவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனை தமிழக அரசியல் மற்றும் வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பைனான்சியர் துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை மேலும் பலரை சிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவில் பயிற்சி மைய அதிபர் கைது! ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம்! அம்மாடியோவ்!!