புதுடெல்லி: பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எல் நினோ நிகழ்வு வேகமாக வலுப்பெற்று வருவதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்து தீவிரமடைந்தால், 2026-ம் ஆண்டின் இறுதியில் எல் நினோ உச்சத்தை அடையக்கூடும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அதன் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தற்போதைய எல் நினோ முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடும்போது வலுவானதாக உருவாகி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் காணப்பட்ட மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறக்கூடும் என கூறப்படுகிறது.
எல் நினோ வலுப்பெறும் காலத்தில் உலகின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக தீவிர வெப்ப அலைகள் ஏற்படுவதுடன், மழைப்பொழிவு மற்றும் பருவநிலை முறைகளிலும் பெரிய மாற்றங்கள் உருவாகலாம். சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், மற்ற பகுதிகளில் கனமழை, புயல் மற்றும் வெள்ளமும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவை பொறுத்தவரை, எல் நினோவின் தாக்கம் தென்மேற்கு பருவமழையில் எதிரொலிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. பருவமழை பலவீனமடைந்தால், நாட்டின் பல பகுதிகளில் மழைப்பற்றாக்குறை மற்றும் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகலாம். குறிப்பாக விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.
மேலும், ராபி பயிர்களுக்கு தேவையான மழைப்பொழிவு குறையக்கூடும் என்றும், குளிர்காலம் வழக்கத்தைவிட மிதமானதாக அமைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் கடல் வெப்பநிலை இயல்பைவிட சுமார் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடல்நீரின் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடைய முக்கியமான காலநிலை நிகழ்வுதான் எல் நினோ. இதன் தாக்கம் மழை, வெப்பநிலை, விவசாயம், உணவுப் பொருட்களின் விலை மற்றும் எரிசக்தி தேவைகளிலும் எதிரொலிக்கக்கூடும்.
முந்தைய வலுவான எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, தற்போதைய சூழ்நிலை உலக பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால், எல் நினோவின் அடுத்தடுத்த நகர்வுகளை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!