கேரளாவில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட இடதுசாரி கூட்டணியினர், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவர்கள் ஆகியோர் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு வருகை தருகிறார். இரு கட்டங்களாக அவர் மாநிலத்தில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன் முதல் கட்டமாக, நாளை (மார்ச் 29) பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

குறிப்பாக, திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் கே. கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும், ரோடு ஷோவிலும் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
இதன் ஒரு பகுதியாக, அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 28 மற்றும் 29) முக்கியப் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையின் நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவினாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர் மற்றும் ஈச்சனாரி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உரிய பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி நாளை மதியம் 2 மணியளவில் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைவார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக கேரளாவின் பாலக்காடு நோக்கி புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் இந்த வருகை என்டிஏ கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மாநில அரசியலில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் இந்தப் பிரசாரம் அமையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!