திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்ற ஆட்டு வியாபாரியிடமிருந்து ரூ.2.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சூழலில் தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உடுமலையிலிருந்து தாராபுரம் வழியாக வெள்ளக்கோவில் சென்று கொண்டிருந்த பொலிரோ வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த வாகனத்தில் உடுமலையைச் சேர்ந்த 71 வயதான ஆட்டு வியாபாரி தங்கவேல் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகள் வாங்கச் செல்வதாக அவர் தெரிவித்தபோதிலும், அந்தப் பணத்திற்கான ஆதார ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

தேர்தல் விதிமுறைகளின்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்பதால், குண்டடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் அந்தத் தொகையை உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.46 லட்சம் பணம் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் அதை அரசு கருவூலத்தில் சேர்த்துள்ளார்.தாராபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உரை!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்களையும் ரசீதுகளையும் உடன் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்படும் என்பதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை 13-ல் அறிவிக்கிறார் சீமான்!