அ.தி.மு.க. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த விழாவில் ஸ்டாலின் பேசிய 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பான கருத்தை “மிகப்பெரிய பொய்” என சாடியுள்ளார்.
இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தேர்தல் நெருங்க நெருங்க பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கும் ஸ்டாலின், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தி.மு.க. அழுத்தத்தால் கொண்டு வந்தது போல பொய் கூறியுள்ளார்.
ஆனால் இந்தத் திட்டத்தை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக தானே மனதில் உதித்ததாகவும், கவர்னர் ஒப்புதல் தாமதமானதால் அரசியலமைப்பு உரிமையை பயன்படுத்தி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக அமல்படுத்தியதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை?” - 125 நாட்களுக்கு பிறகு ‘தளபதி’யை வம்புக்கு இழுத்த இ.பி.எஸ்!

மேலும், “சத்துணவு திட்டம் என்றால் புரட்சித் தலைவர், தொட்டில் குழந்தை திட்டம் என்றால் புரட்சித் தலைவி அம்மா, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு” என சாதனைகளை அடுக்கலாம் என்றும் கூறினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்தை தனியார் பங்களிப்புடன் தனது ஆட்சியில் தொடங்கியதை, ஸ்டாலின் உல்டாவாக்கி புதிய திட்டம் போல தம்பட்டம் அடிப்பதாகவும் விமர்சித்தார்.
“வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலினின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது” என இபிஎஸ் கடுமையாக சாடினார். “பொய்யாலும் விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது” என்பதை ஸ்டாலின் விரைவில் உணர்வார் என்றும், இதுபோன்ற பொய்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக – திமுக இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. இபிஎஸ்ஸின் இந்த தாக்குதல் திமுக அரசின் சாதனைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. திமுக தரப்பு இதற்கு பதிலடி கொடுக்குமா என அரசியல் விமர்சகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் நடந்த ரகசிய மீட்டிங்! இபிஎஸ்-ஐ சந்தித்த பாமக டீம் - திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஸ்கெட்ச்..!