கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி விழாவில் கலந்துகொண்ட கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, செய்தியாளர் சந்திப்பின் போது அரசியல் களத்தில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிரடியாகப் பேசினார். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்துத் தான் பேசிய சர்ச்சை வார்த்தைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.
கடந்த செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றி நாகரிகமற்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன் (நாய் பிடிக்கும் வேலை எனப் பேசியது). அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கே.பி. முனுசாமி உருக்கமாகக் குறிப்பிட்டார்.
நிதீஷ் குமார் போல எடப்பாடி பழனிசாமிக்கும் நிலைமை ஏற்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்திற்குப் பதிலளித்த அவர், "திமுக எந்த அளவு நிலைத்திருக்குமோ, அதுவரை எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றுவார். ஸ்டாலின் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
இதையும் படிங்க: தஞ்சையில் நாளை விஜய்! செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு!
ஓபிஎஸ் மீது தாக்குதல்: ஓ.பன்னீர்செல்வத்தைத் துரோகத்தின் அடையாளம் எனச் சாடிய முனுசாமி, "ஓபிஎஸ் அதிமுகவிற்குப் பாதியில் வந்தவர்; இயக்கத்திற்காக உழைக்காமல் பதவிச் சுகத்தை அனுபவித்தவர். ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமர்த்தப்பட்ட அவர், இன்று நன்றிகெட்டத்தனமாக எதிரிகளின் காலடியில் மண்டியிட்டுள்ளார்" எனச் சாடினார்.
விசுவாசம் குறித்துப் பேச முதல்வர் ஸ்டாலினுக்கு அருகதையில்லை எனக் குறிப்பிட்ட அவர், கட்சியில் உழைத்த தியாகிகளை ஓரம் கட்டிவிட்டுத் தனது மகனை முதலமைச்சராக்க ஸ்டாலின் துடிப்பது விசுவாசமற்ற செயல் எனக் குற்றம் சாட்டினார்.
மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இபிஎஸ் உயர்ந்து வருவதைக் கண்டு ஸ்டாலினுக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது. அதனால் தான் மக்களைக் குழப்ப ஓபிஎஸ்-ஐப் புகழ்ந்து பேசி வருகிறார் எனத் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் NDA உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்ற கேள்விக்கு, "யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது" என முனுசாமி சுருக்கமாகப் பதிலளித்தார்.
முன்னதாக, அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் பரிதா நவாப் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பெண்களுக்குப் புடவைகள் மற்றும் பரிசுகளை வழங்கி கே.பி. முனுசாமி சிறப்பித்தார்.
இதையும் படிங்க: தவெக-வில் இணையப்போகும் அந்த டாப் ரோல் விஐபி யார்? செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்!