சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவானபோது பெரும் எதிர்பார்ப்புடன் இணைந்த பல முன்னாள் எம்எல்ஏக்கள், இப்போது பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். கட்சியில் எந்தப் பொறுப்பும் கிடைக்காததுடன், வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். புதிய கட்சியில் அரசியல் அனுபவம் கொண்ட தங்களுக்கு உடனடியாக முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், செங்கோட்டையன் உள்பட சிலரைத் தவிர மற்றவர்களுக்கு எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
மேலும், தேர்தல் அனுபவத்தை வைத்து சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தகர்ந்துள்ளது. பலருக்கு சீட் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டதுடன், “கோடிகளில் பணம் கொடுத்தால் மட்டுமே சீட் பற்றி பேசலாம்” என்ற தகவல் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

முன்னாள் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் கூறுகையில், “தவெகவில் இணைந்தால் பலர் வருவார்கள், கூட்டணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் சேர்ந்தனர். ஆனால் இணைந்த பிறகு துண்டு போட்டதோடு சரி. மாவட்ட அளவில் கூட மரியாதை இல்லை. இப்போது தனித்துப் போட்டியிடும் சூழலில், பழைய எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
சேலம், சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் பலரும் ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கியுள்ளனர். தாய்க் கட்சியில் இருந்தபோது தனி ஆதரவு வட்டம் வைத்திருந்தவர்கள், இங்கு அதிகாரமும் இல்லாமல், அரசியல் வருமானமும் இல்லாமல் முடங்கிப் போயுள்ளனர்.
பெரும் ஆரவாரத்துடன் தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதிகள் இப்போது தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி, அடுத்த கட்டம் என்ன என்பதை அறியாமல் தவித்து வருகின்றனர் என்பது தவெக வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய விஷயமாக உள்ளது.
இதையும் படிங்க: விஜயின் வேட்பாளர் தேர்வுக்கு உதவும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்?! தவெக புது ரூட்! தகுதியானவரை செலக்ட் செய்ய ஏற்பாடு!!